தமிழ்நாடு

காவலரை வெட்டிய வழக்கில் தொடர்புடைய நபர் கொலை

webteam

சென்னையில் கடந்த ஆண்டு தலைமைக்காவலரை வெட்டிய வழக்கில் தொடர்புடைய நபர், அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நெற்குன்றம் - ஏ.வி.கே. நகரில் அட்டை கம்பெனி அருகே 25 வயது இளைஞரின் உடல் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், கோயம்போடு காவல்துறையினர் அங்கு சென்றனர். உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பிய அவர்கள், விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், கொல்லப்பட்ட நபர் திருவேற்காட்டைச் சேர்ந்த ரஞ்சித் என்பதும், அவர் மீது பூந்தமல்லி, மதுரவாயல் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 

மேலும், கடந்த ஆண்டு பூந்தமல்லியில் தலைமைக்காவலர் அன்பழகனை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதாகி சிறை சென்றவர் ரஞ்சித் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் எதற்காக கொல்லப்பட்டார் என விசாரித்து வரும் அவர்கள், ரஞ்சித்தின் உடல் கிடந்த பகுதியில் சிசிவிடி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வுசெய்து வருகின்றனர்.