தமிழ்நாடு

நெல்லையில் முதியவர் வெட்டிக் கொலை : இளைஞர்களை தட்டிக் கேட்டதால் பரிதாபம்

நெல்லையில் முதியவர் வெட்டிக் கொலை : இளைஞர்களை தட்டிக் கேட்டதால் பரிதாபம்

webteam

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் முதியவர் ஒருவர் அரிவாளால் வெட்டியும், இரும்பு கம்பியால் அடித்தும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பண்டாரம். 75 வயதாகும் இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தும் இவர் பல ஆண்டுகளாக குடும்பத்தைவிட்டு பிரிந்து மீனாட்சிபுரம் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள சுடலை கோவிலில் தங்கி ஆற்றில் மீன் பிடித்து அதனை விற்பனை செய்து தனது வாழ்வாதாரத்தை நகர்த்தி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவர் கோவிலில் இருந்தபோது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியும், இரும்பு கம்பியால் அடித்து தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பண்டாரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காலையில் அவர் இறந்து கிடப்பதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த ஆற்றுபகுதியில் கோவிலின் அருகே இளைஞர் இரவு நேரங்களில் மது அருந்தவும் வருதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்த பகுதி முழுவதும் காலி மதுபாட்டிள்களும்,சிகரெட் பெட்டிகளும் கிடக்கின்றன. அப்படி வந்தவர்களை பண்டாரம் தட்டிக்கேட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பண்டாரத்தை கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.