தமிழ்நாடு

சொந்த ஊர் திரும்பிய மக்கள்... மதுரை மேலூர் பகுதியில் அதிகரித்த கொரோனா பாதிப்பு

PT

மேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்த நிலையில், சென்னை மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் இருந்து வந்தவர்களின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கல்லம்பட்டி, கரையப்பட்டி, சொக்கலிங்கபுரம், உதினிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதிகளில் இருந்து சொந்த ஊரான மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டி, கருங்காலக்குடி, பூதமங்கலம், நெல்லுகுண்டுபட்டி, முத்திருளாண்டிபட்டி, காரைக்குடிப்பட்டி, கீழதேத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்திருந்த நபர்களுக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்  14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மதுரை அரசு கொரோனா தடுப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதன் மூலம் மேலூர் பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.