தமிழ்நாடு

கழிவறைக்குள் ஒளிந்திருந்த மர்ம நபர்! போலீசை வரவைத்த ஹவுஸ் ஓனர்! அடுத்து நடந்தது என்ன?

PT

புதுக்கோட்டையில் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் கழிப்பறைக்குள் புகுந்து தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு உள்ளே மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில்நகர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம். இவர் வீட்டு சமையல் அறையின் அருகில் கழிப்பறை ஒன்று இருக்கிறது. மாணிக்கம் கழிப்பறைக்கு செல்ல முற்பட்ட போது கழிப்பறை கதவு மூடி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். கதவை அவர் திறக்க முற்பட்ட போது உள்ளே இருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு அமைதியாக இருந்துள்ளார். யார் நீங்கள் என்று பல முறை வீட்டின் உரிமையாளர் மாணிக்கம் கேட்டதற்கு பதில் சொல்லாததால் கழிப்பறையின் வெளியே உள்ள தாழ்ப்பாளைப் பூட்டி விட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபரை வெளியே வரச்சொன்ன நிலையில் அவர் கழிவறையை விட்டு வெளியே வந்தார். அந்த மர்ம நபர் அறந்தாங்கி அக்னி பஜாரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் சுப்பிரமணி என்பதும் அவர் தச்சுப்பட்டறையில் வேலை செய்பவர் என்பதும் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.

தற்போது சுப்பிரமணியை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தன்னை 4 பேர் அடிக்க துரத்தியதாகவும் அவர்களுக்கு பயந்து சிறிது நேரம் முற்புதரில் மறைந்து இருந்து விட்டு அதன் பின்னர் கழிப்பறைக்குள் வந்து இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் சுப்பிரமணி கஞ்சா பயன்படுத்தியதால் இது போன்று கழிவறைக்குள் பதுங்கினாரா? அல்லது ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட வந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் வீட்டின் கழிப்பறைக்குள் திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒளிந்திருந்தது அருகில் குடியிருப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.