ஒட்டன்சத்திரம் அம்மா உணவகத்தில் ஆறு வருடங்களாக பணிபுரிந்த பெண்களை நீக்கிவிட்டு புதிய பெண்களை பணியில் அமர்த்திய நகராட்சி நிர்வாகம். வேலையிழந்த பெண்கள் வாசலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் தற்காலிக ஊழியர்களாக 12 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உணவகம் மூலம் தினமும் 150 முதல் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பசியாறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அம்மா உணவகத்தில் கடந்த ஆறு வருடங்களாக பணியாற்றிய 12 பெண்களில் ஆறு பெண்களை மட்டும் பணியில் இருந்து நீக்கியுள்ளனர். நேற்று இரவு பணி முடிந்தபோது அம்மா உணவகத்தின் சாவியை நகராட்சி ஊழியர்கள் கேட்டு வாங்கியுள்ளனர். ஆனால் தங்களை பணியில் இருந்து நீக்கியதை அவர்கள் தெரிவிக்கவில்லை என்று அந்த பெண்கள் தெரிவித்தனர்.
இன்று காலை 3 மணிக்கு வழக்கம் போல் பெண்கள் பணிக்கு வந்துள்ளனர். அப்போது அம்மா உணவகத்தில் புதியதாக பெண்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு தங்களை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும், இனிமேல் பணிக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளனர்.
கடந்த ஆறு வருடங்களாகவும், கொரோனா தொற்று காலத்தில் தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணிபுரிந்து வரும் தங்களை சிலரின் தூண்டுதலின் பேரில் நீக்கியிருப்பதாகவும் தங்களுக்கு மீண்டும் பணியில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.