அடகு வைத்த நகையை திருப்ப தாயுடன் வந்த 13 வயது சிறுமியிடம் இருந்தப்பணத்தை நூதன முறையில் திருடிய நபா் குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சூரிய நாராயணன் மற்றும் தேவி. இவர்களது மகள் பிரியங்கா (13). தேவியும், பிரியங்காவும் சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கனரா வங்கியில் அடகு வைத்த நகையை திருப்பச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வட்டிக்குறைவாக வைத்து நகையைத் திருப்பித் தருவதாக கூறியதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அதற்காக ஸ்டாம்ப் வேண்டுமென்று கூற, தேவி நகையைத் திருப்புவதற்காக கொண்டு வந்த 2 லட்சத்து 40 ஆயிரமும் ரூபாயை பிரியங்காவிடம் கொடுத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து சிறுமியிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த மர்ம நபர் சிறுமியிடம் நூதன முறையில் பணத்தை ஏமாற்றி வாங்கிச் சென்றுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தேவி இது குறித்து சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமாராவில் பதிவான காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.