தமிழ்நாடு

முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய நாய்; காப்பாற்றிய அரசு கால்நடை மருத்துவர்

JustinDurai

மதுரை மாவட்டத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நாயின் வயிற்றிலிருந்து முகக்கவசம் வெளியே எடுக்கப்பட்டது. 

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அருகேயுள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் குரு. இவரது வீட்டில் இரண்டரை வயதுடைய புருனோ என்ற லேப்ரடார் இன நாய் ஒன்று வளர்ந்து வந்துள்ளது. இந்த நாய் கடந்த 9 நாட்களாக உடல்நலம் குன்றிய நிலையில், உணவு சாப்பிடாமல் சோர்வாக இருந்துள்ளது. இதனையடுத்து கால்நடை மருத்துவரான கூடல்புதூர் பகுதியை சேர்ந்த மெர்லின்ராஜ் என்பவரை தொடர்புகொண்டுள்ளார் நாயின் உரிமையாளர் குரு.

இதையடுத்து ஆனையூர் பகுதியிலுள்ள அரசு மருத்துவருக்கு சொந்தமான கால்நடை மருத்துவமனையில் வைத்து நாயின் உடலை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது நாயின் வயிற்றில் மனிதர்கள் பயன்படுத்தகூடிய துணியால் ஆன முகக்கவசத்தை விழுங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்காரணமாக உணவுக்குழாயக்கு உணவு செல்லாத காரணத்தால் நாய் உணவு உண்ண முடியாத நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அரசு மருத்துவர் இரண்டு பாட்டீல் குளுக்கோஸ், வாமிட்டிங் சிகிச்சை மூலமாக முகக்கவசத்தை முழுவதுமாக அகற்றப்பட்டது. நாய் தற்போது மீண்டும் உற்சாகமாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

மனிதர்களின் பாதுகாப்புக்காக அணியும் முகக்கவசங்களை அலட்சியமாக சாலைகளில் வீசி செல்வதால் நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளும், கால்நடைகளும் விழுங்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகும் என்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது மருத்துவ சேவை மூலமாக உயிருக்கு போராடிய நாயை காப்பாற்றிய அரசு மருத்துவரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.