தமிழ்நாடு

தருமபுரி: ஒரு பவுன் தங்க நகைக்காக மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த நபர்

webteam

பென்னாகரம் அருகே ஒரு பவுன் தங்க நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஆனைக்கல்லானூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மதிமுனியம்மாள். இவர் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இவருக்கு அதேப் பகுதியைச் சேர்ந்த ராஜா உதவிகள் செய்து கவனித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடிபோதையில் இருந்த ராஜா மூதாட்டி காதில் அணிந்திருந்த நகையை கேட்டு தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

ஆனால் அணிகலனை மூதாட்டி தரமறுத்ததால், ராஜா அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கிருந்து தப்பியுள்ளார். சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் நுழைந்து பார்த்த போது, அங்கு மூதாட்டி இறந்து கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டு, ஆனைக்கல்லானூர் பகுதியில் பதுங்கி இருந்த ராஜாவை பென்னாகரம் காவல்துறையினர் கைது செய்தனர்.