தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளிவைப்பு

webteam

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி  தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில்  முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதில்  கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிக்க: ‘தொன்மையான தமிழ் மொழி இருக்க நாம் எதற்காக இந்தி படிக்க வேண்டும்’ - சீமான் கேள்வி