தமிழ்நாடு

மீண்டும் திமுகவில் இணைவது குறித்து தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் - மு.க.அழகிரி

webteam

மீண்டும் திமுகவில் இணைவது குறித்து தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைக்க மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பாவான முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை சந்தித்து ஆசி பெற்றார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியை துவங்கி வைப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருர் உதயநிதி ஸ்டாலின். விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்தார். இதையடுத்து தனியார் ஹோட்டலுக்குச் சென்ற அமைச்சர் உதயநிதி, சற்று நேரத்தில் கிளம்பி டிவிஎஸ் நகரில் உள்ள தனது பெரியப்பாவான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் சந்தித்தார்.

வீட்டிற்குள் நுழையும் முன்பே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, மு.க.அழகிரி வரவேற்க உதயநிதி ஸ்டாலின் அழகிரியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து அழகிரியின் துணைவியார் காந்தி அழகிரி உதயநிதியின் நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினும் அழகரியும்; மாறி மாறி பொன்னாடை போர்த்திக் கொண்டனர்.

இந்த சத்திப்பின் போது தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எம்எல்ஏ தளபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து வீட்டிற்குள் சென்று உறவினர்களை சந்தித்த பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, அமைச்சராக பதவியேற்ற பின் எனது பெரியப்பாவை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன். எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் ஆசிர்வதித்தனர், இருவரும் மனநிறைவோடு வாழ்த்தினர் என்றார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தம்பி மகன் என்ற முறையில் எங்களிடம் ஆசி பெற உதயநிதி வந்திருந்தார். அமைச்சர் அன்பில் மகேஷும் எனக்கு இன்னொரு மகன் தான். அவருக்கும் ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தேன். நான் திருநகரில் உள்ள வீட்டில் இருந்த போது என் குழந்தைகளுடன் விளையாடியவர்கள் இன்று அமைச்சர்களாக உள்ளார்கள் என்பது எல்லை இல்லா மகிழ்ச்சியாக உள்ளது.

அதைவிட சந்தோசம் தம்பி முதல்வராக உள்ளார் மகன் அமைச்சராகியுள்ளார் என்றவரிடம் திமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு, அதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துச் சென்றார்.