தமிழ்நாடு

இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்; வழக்கத்தைவிட வெயில் சுட்டெரிக்கும்

JustinDurai

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.

ஆண்டுதோறும் கோடையில் நிலவும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் இன்று துவங்குகிறது. பொதுவாக கத்திரி வெயில் தொடங்கி தொடர்ந்து 25 நாட்கள் இருக்கும். அதன்படி மே 29-ம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும். மற்ற நாட்களை விட, கத்திரி வெயிலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக ஒரு சில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது. இந்த நிலையில்  கத்திரி வெயிலும் இன்று தொடங்குவதால் மக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மக்கள் அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்த்தால் உடலில் நீர்வற்றிப்போகும் அபாயத்தைத் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.