தமிழ்நாடு

இரண்டாவது மனைவியை வெட்டிய கணவர்; மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தூக்கிட்டு தற்கொலை

kaleelrahman

ஒசூர் அருகே கோபித்துக்கொண்டு பிரிந்து வாழ்ந்துவந்த இரண்டாவது மனைவியை அழைத்தும் வராததால் அரிவாளால் சரமாரியாக கணவன் வெட்டிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகை கிராமத்தைச் சேர்ந்த ஒசராயப்பா (55). இவருக்கு கரி பீரம்மா என்பவருடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததால் ஒசராயப்பா தனது அக்காவின் மகள் வெங்கடலட்சுமியம்மா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு நாரிபுரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது மனைவி வெங்கடலட்சுமியம்மா (50)கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுவிட்டு தனது மகனான முருகேசன் (35) என்பவருடன் நாரிபுரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

ஓட்டுநரான முருகேசன் பணிக்கு சென்று விட, ஒசராயப்பா இரண்டாவது மனைவி வெங்கடலட்சுமியம்மாவை சமாதானப்படுத்த வந்துள்ளார். ஒசராயப்பா மனைவியை எவ்வளவோ சமாதானப்படுத்த நினைத்தாலும் வெங்கடலட்சுமியம்மா கணவனுடன் செல்ல மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒசராயப்பா அரிவாளால் கண், தொண்டை, தலை உள்ளிட்ட பகுதகளில் சரமாரியாக வெட்டி உள்ளார்.

இரத்த வெள்ளத்தில் வெங்கடலட்சுமியம்மா மயங்கியதால், இறந்து விட்டதாக நினைத்த ஒசராயப்பா இரண்டாவது மனைவி வீட்டின் பின்புறமாக உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வெங்கடலட்சுமியம்மா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒசராயப்பாவின் உடலை கைப்பற்றிய பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.