தமிழ்நாடு

காட்டுப்பகுதி.. நடு இரவு.. 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை!

kaleelrahman

சத்தியமங்கலத்தில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் செங்காட்டைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி சடையம்மாள். நிறைமாத கர்ப்பிணியான சடையமாளுக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டதால் கடம்பூர் 108 ஆம்புலன்ஸில் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.


அப்போது கடம்பூர் செல்லும் வழியிலேயே அதிக வலிஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர், மருத்துவ உதவியாளர் ராமன் ஆகியோர் பிரசவம் பார்த்தனர். இதில், சடையம்மாளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தையுடன் தாய் புறப்பட்ட 108 ஆம்புலன்ஸ், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது.

ஆம்புலன்ஸை தொடர்ந்து சடையம்மாளின் கணவர், மாமியார் உட்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது மிகவும் குறுகலாக இருக்கும் போன்பாறை என்ற இடத்தில் காட்டெருமை வழிமறித்து நின்றது. இதனால் அரைமணி நேரமாக சாலையை கடக்கமுடியாமல் அடர்ந்த காட்டில் அதே இடத்தில் ஆம்புலன்ஸ் காத்திருந்தது.


அப்போது அங்கிருந்த காட்டெருமை திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தாக்க முயன்றது. உடனே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர் ஒலி எழுப்பி காட்டெருமையை விரட்டினார்.

அரைமணி நேர போராட்டத்துக்கு பின் தாயும் சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.