தமிழ்நாடு

நள்ளிரவு முதல் தொடங்கியது மீன்பிடித் தடைக்காலம்

webteam

தமிழகமெங்கும் மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

வங்கக்கடலில் ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் மாதம் தொடங்கி ஜுன் வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. 2 ஆயிரமாவது ஆண்டில் இருந்து தடைக்காலம் அமல்படுத்தப்படும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன், ஆண்டுக்கு 45 நாட்கள் தடைக்காலம் என்பது 61 நாட்களாக உயர்த்தப்பட்டது.

இதன்படி இன்று நள்ளிரவு தொடங்கிய மீன்பிடித் தடைக்காலம், ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே மீன் பிடிக்க சென்றவர்கள் ஊர் திரும்பியுள்ளனர். இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடலுக்குச் சென்ற மீன் பிடிப்படகுகளும் துறைமுகம் வந்து சேர்ந்தன. மீன் ஏற்றுமதி தளங்கள் மூடப்பட்டன.

மீன் பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ளதால் மீன்கள் விலையும் வரும் நாட்களில் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீன் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதை 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.