தமிழ்நாடு

உயிரிழந்த மகனுக்கு 6 அடியில் கம்பீரமான மெழுகுசிலை - நெகிழவைத்த தந்தை!

webteam

மதுரை அருகே உயிரிழந்த மகனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு தந்தை ஒருவர் 6 லட்சம் மதிப்பீட்டில் தத்துரூப மெழுகு சிலை ஒன்றை நிறுவி மரியாதை செலுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரையில் உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன்- சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு சுதா, கீதா என்ற இரண்டு மகள்களும், மாரிகணேஷ் என்ற மகனும் இருந்தனர். இதில் மாரிகணேஷ் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார்.

இளம் வயது முதலே மாரிகணேஷ் புல்லட் பைக் ரேசராகவும் இருந்து வந்துள்ளார். அதில் பல பதக்கங்களும், விருதுகளும் பெற்ற மாரிகணேஷ் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மாரிகணேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தில் அவரது தந்தை முருகேசன் சுமார் 6 லட்சம் செலவில் மாரிகணேஷின் தத்ரூபமான மெழுகு சிலை செய்து அவனியாபுரத்தில் உள்ள செம்பூரணி சாலையில் உள்ள தனது திருமண மண்டபத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழிபாட்டுக்கு வைத்தார்.