தமிழ்நாடு

ஆயுர்வேதா, சித்தா போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

ஆயுர்வேதா, சித்தா போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

webteam

மயிலாடுதுறை அருகே ஆயிரக்கணக்கான போலி மருத்துவ சான்றிதழ் வழங்கிய போலி பல்கலைக்கழகத்திற்கு மருத்துவத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நாகை மாவட்டம் குத்தாலத்தில் அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக் கழகம் என்ற பெயரில், போலியான பல்கலைக்கழகம் ஒன்றை செல்வராஜ் என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். தொலைதூர பல்கலைக்கழகம் என்ற பெயரில் இவர் நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா ஆகிய மருத்துவத்துறைகளின் கீழ் போலிச் சான்றிதழ்கள் அளித்துள்ளார். 

இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இருந்தும் இவரிடம் பணம் கட்டி ஆயிரக்கணக்கானோர் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் போலி மருத்துவ பட்டங்களை பெற்றுள்ளனர். இவரிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும் மாற்று முறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து தினசரி பத்திரிகை ஒன்றில் விண்ணப்பங்கள் வரவேற்பதாக இவர் அளித்த விளம்பரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

இந்தச் சுழலில் குத்தாலத்தில் ஒரு வீட்டில் இந்த போலி பல்கலைக்கழகம் நடத்தி வருவது தெரியவந்தது. சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனரக அதிகாரிகள், டிஎஸ்பி தாமஸ் பிரபாகர் தலைமையில், நாகை இணை இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் போலி பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஏராளமான போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலி பல்கலைக்கழகத்தை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். போலி மருத்துவ சான்றிதழ்கள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழகம் நடத்தி வந்த திருவேள்விக்குடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.