தமிழ்நாடு

கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

kaleelrahman

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும், கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும் தாக்கல் செய்யபட்ட வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வளர்ப்பு யானைகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்த எல்சா அறக்கட்டளை சார்பில் யானைகள் பிடிக்கபடும் போது, விதிமீறல்கள் நடைபெறுவது குறித்து புகைபட ஆதாரங்களுடன் விளக்கமளிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக காவிரி நதி அருகே கோயிலுக்கு சொந்தமான வனம் போன்ற சூழ்நிலை கொண்ட நிலத்தில் பராமரிக்கப்படலாம் என்றும், விழா காலங்களில் மட்டும் அவற்றை கோயிலுக்கு அழைத்து வரலாம் என்றும் யோசனை கொடுக்கப்பட்டது.

இந்த யோசனைக்கு வரவேற்பு தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து வளர்ப்பு யானைகளின் வீடியோ பதிவை தயாரித்தும், அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையும், அவை எப்படி பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானைகளாக மாற்றபட்டன? என்பது குறித்தும், கால்நடை மருத்துவரை நேரில் அழைத்துச் சென்று கோயில்களில் உள்ள யானைகளின் உடல் நலன் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வனத்துறை முதன்மை பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.