தமிழ்நாடு

“என் மீதே புகார் கொடுப்பியா...?”-ஆசிரியையை கத்தியால் குத்த முயன்ற சமையலர்..!

webteam

கோவில்பட்டி அருகே ஆசிரியையை கத்தியால் குத்த‌ முயன்ற சமையலரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திக்குளம் மந்தி குளத்தில் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கலைச்செல்வி. 

இதேப்பள்ளியில் சமையலராக பணியாற்றி வரும் லட்சுமி என்பவர் கலைச்செல்வியை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைச்செல்வி தப்பித்து பள்ளிக்குள் ஒளிந்து கொண்டதால் ஆத்திரமடைந்த லட்சுமி அவரது இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தபோது சத்துணவு சரியில்லை என்று தெரிவித்துள்ளனர். இதற்கு ஆசிரியை கலைச்செல்விதான், சத்துணவை பற்றி புகார் அளித்திருக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் லட்சுமி இச்செயலில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.