தமிழ்நாடு

உதவிகேட்டு மனு அளித்த பெண்ணுக்கு ஒருமணி நேரத்தில் பணிநியமன ஆணை வழங்கிய ஆட்சியர்

kaleelrahman

தூத்துக்குடி குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த ஒருமணி நேரத்தில் பெண்ணுக்கு அரசு வேலை உடனடி பணிநியமன ஆணை வழங்கி நெகிழ்வை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்.

தூத்துக்குடி தபால்தந்தி காலனியைச் சேர்ந்தவர் தெய்வானை. இவரது கணவர் கடந்த மே மாதம் இறந்துவிட்ட நிலையில், இவரது இரண்டு பிள்ளைகளில் ஒருவர் மனவளர்ச்சி குன்றியவர். மற்றொருவர் இருதய குறைபாட்டுடன் பிறந்தவர். இந்த இரண்டு பிள்ளைகளுடன் வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு வந்த அவர், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி 1 மணி நேரத்திற்குள்ளாக அந்த பெண்ணுக்கு, தூத்துக்குடி சிப்காட் நிலஎடுப்பு பிரிவு அலுவலக உதவியாளராக தற்காலிக பணி ஆணை வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெய்வானை நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் குறைதீர் கூட்டத்தில் நெகிழ்வை ஏற்படுத்தியது.