தமிழ்நாடு

கடலூர்: பெயிண்டிங் தின்னரை குடித்த 10 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

நிவேதா ஜெகராஜா

குளிர்பானம் என நினைத்து பெயிண்டிங் தின்னரை குடித்த 10 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரியின் தந்தை பவுலின் வீடு பெண்ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தில் உள்ளது. அங்கு நடந்த கோயில் திருவிழாவுக்காக தனது 2 குழந்தைகளுடன் நேற்று (20.5.22) தாழநல்லூர் கிராமத்திற்கு சென்றுள்ளார் பரமேஸ்வரி. அன்று மாலை பரமேஸ்வரியின் இரண்டாவது மகன் கிஸ்வந்த் (10 மாத ஆண் குழந்தை), வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறுதலாக பெயிண்டிங் வேலைக்குப் பயன்படுத்தப்படும் தின்னரை குடித்துள்ளார்.

இதனால் கவலைக்கிடமான முறையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி நள்ளிரவு குழந்தை உயிரிழந்திருக்கிறார். இதுகுறித்து பெண்ணாடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கையில் படும் அளவிற்கு குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அபாயகரமான பொருட்களை வைக்கக் கூடாது. அனைவரும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே இப்போதைக்கு தேவைப்படும் முக்கியமான விழிப்புணர்வாக உள்ளது.