தமிழ்நாடு

முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு; திமுக தலைவர் ஸ்டாலின் ஏப்.16ம் தேதி ஆஜராக உத்தரவு

webteam

முதல்வர் பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் ஏப்ரல் 16 ஆம் தேதி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்த மக்களின் மனநிலை, வாக்கி டாக்கி கொள்முதல் உள்ளிட்டவைக் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். இந்தக்கருத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆகியோருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாகக் கூறி முதல்வர் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் மு.க.ஸ்டாலினை ஏப்ரல் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றியும் அங்கு ஸ்டாலினை ஆஜராக அவர் உத்தரவிட்டுள்ளார்.