தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு அனல் காற்று வீசுவது தொடரும்: வானிலை மையம் தகவல்

JustinDurai

தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு அனல் காற்று வீசுவது தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

27 மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

வெப்பசலனம் காரணமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 107 டிகிரி பாரன்ஹீட்டாகவும், நுங்கம்பாக்கத்தில் 106 பாரன்ஹீட்டாகவும் வெப்பம் பதிவாகியுள்ளது.