தமிழ்நாடு

கால்நடைகள் சுற்றித் திரிய சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா?: உயர்நீதிமன்றம்

EllusamyKarthik

கால்நடைகள் சுற்றித் திரிய சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரி  கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சென்னையில் தெரு நாய்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகள் சாலைகளில் திரிவதாகவும், போக்குவரத்து மிகுந்த கடற்கரை சாலையிலும் கால்நடைகள் கடந்து செல்வதை பார்க்க முடிவதாகவும் குறிப்பிட்டனர்.

மாநகராட்சிக்கு வெளியில்தான் கால்நடைகள் இருக்க வேண்டும் எனவும், நகருக்குள் இருப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பினர்.

மாநகராட்சி தரப்பில் அளித்த விளக்கத்தில், கால்நடைகளின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு, மீண்டும் சாலையில் விடமாட்டோம் என உத்தரவாதம் பெறப்பட்டு, கால்நடைகள் விடுவிக்கப்படுவதாகவும், மாநகராட்சி சட்டப்படி பன்றிகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா என கேள்வி எழுப்பியதுடன், மாநகராட்சி பகுதியில் கால்நடைகளுக்கு தடைவிதிக்கும் விதிகள் ஏதும் இல்லை என்றால், அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் என கூறி, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.