அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்  pt desk
தமிழ்நாடு

”அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல” - மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்

மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

PT WEB

மக்களவையில் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு

நேற்று மக்களவையில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் கவுகான், ”தமிழகத்திற்கான உதவிகளை தர மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. தமிழக மக்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் போற்றுகிறேன். நூம் அனைவரும் இந்தியத் தாயின் மகன்கள். இதில், பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், நானே இரண்டுமுறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். ஒருமுறை வேளாண் துறை பணிக்காகவும், ஒருமுறை ஊரக வளர்ச்சித்துறை பணிக்காகவும் வந்தேன். ஆனால், இரண்டு முறையும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரோ, வேளாண் துறை அமைச்சரோ எனது கூட்டத்திற்கு வரவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்கு வந்த போது தனது கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என்று சமீபத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அவருக்கு சில தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை. இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் முதல் ஒன்றிய அரசால் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை 2,839 கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டின் முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கு பதில் என்ன?

அரசு நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி சென்றிருந்தேன்:

இதையெல்லாம் மறைத்து, நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர். அவர், தமிழ்நாடு வந்தபோது, குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா அரசு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். ஆனாலும் அவருடன் தொலைபேசியில் உரையாடி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நான் முன்வைத்ததை அவர் ஏனோ மறந்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது. துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசியதையும் கூட அறிவார்.

தமிழ்நாட்டுக்குரிய நிதியை விடுவிப்பதைப் பற்றி வாய்திறக்கவில்லை:

இது தவிர, காணொலி வாயிலான ஆய்வுக் கூட்டங்களிலும் நான் அவருடன் கலந்து கொண்டுள்ளேன். இருப்பினும் தமிழ்நாட்டுக்குரிய நிதியை விடுவிப்பதைப் பற்றி வாய்திறக்காமல், திட்டமிட்டு நான் ஏதோ சொந்தப்பணிக்காக துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதைப் போல பேசியுள்ளது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல!

கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுட்டெரிக்கும் வெயிலில் தங்களது உடல் உழைப்பை தந்து விட்டு ஊதியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள பாக்கியை வழங்குவதில் இதே ஆர்வத்தை அவர் காட்டியிருந்தால் நாம் பாராட்டியிருப்போம்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.