மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் போதுமான அளவு தொகை இருந்தும், கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு உதவவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை கஜா புயல் புரட்டி போட்டது. புயல் தாக்கி ஒருமாதம் கடந்துவிட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின், மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத்தொகையில் போதுமான அளவு நிதி இருந்தும், கஜா புயல் நிவாரணங்களுக்காக தொகையை வழங்கவில்லை என கூறினார். நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக 353 கோடி ரூபாயை வழங்கியது என்றும் அதைத்தவிர இன்று வரை வேறு எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும் மத்திய குழு ஆய்வின் அடிப்படையில் நிவாரணம் வழங்கலாம், ஆனால் தாமதப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து விளக்கங்கள் கேட்கப்படுவதாக தெரிவித்தார். இதற்கு மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நிவாரணம் வழங்க இயலும், இது தொடர்பாக தமிழக அரசு அளித்த விளக்கங்கள் நேற்று மதியம் மத்திய அரசிற்கு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசுத்தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்கள் போதுமானவையாக உள்ளதா? எப்போது முடிவெடுக்கப்படும்? என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்