தமிழ்நாடு

பூந்தமல்லி: வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டவர் மீது மது பாட்டில் வீச்சு

webteam

புத்தாண்டு கொண்டாட்டத்தில் வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டவர் மீது மது பாட்டில் வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், செந்தூர்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது வீட்டின் அருகே நேற்று இரவு வாலிபர்கள் சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மது அருந்தி கொண்டு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை கார்த்திகேயன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் கார்த்திகேயன் மீது கத்தியை கொண்டு தாக்க முயற்சி செய்தனர். அதனை தடுப்பதற்காக கார்த்திகேயன் கட்டையை கொண்டு வரும்போது வாலிபர்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை கொண்டு வீசியதில் கார்த்திகேயனுக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

காயம் அடைந்த கார்த்திகேயன் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவங்களை வைத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை பூந்தமல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.