தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! - தமிழக டிஜிபி

webteam

கல்லூரி மாணவி சத்யா பரங்கிமலை ரயிலில் தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

காதலிக்க மறுத்ததாக கூறி ஆதம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில்முன்பு சத்யாவை தள்ளிவிட்டு படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட துயரத்தில் அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த வழக்கு பரங்கிமலை காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ஏழு தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில் இன்று காலை சென்னை துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த சதீஷை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து மாம்பலம் ரயில் நிலையத்தில் உள்ள இருப்புப் பாதை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த கொடூர கொலை வழக்கை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில், தற்போது இந்த கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கல்லூரி மாணவி சத்யாவின் வீட்டிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். அப்பொழுது, இறந்துபோன சத்யாவின் தாயார் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் காவல் ஆணையாளரிடம் தெரிவித்து, அதற்கான மருத்துவ உதவி கோரினர். அதன்பேரில், காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், மருத்துவர் அனிதா ரமேஷ் மற்றும் AATRAL Foundation தலைமையிலான மருத்துவ குழுவினர் மூலம், சத்யாவின் தாயாருக்கு சவீதா மருத்துவமனையில், இலவச சிறப்பு மார்பக புற்றுநோய் சிகிச்சை அளிக்க காவல் கரங்கள் அமைப்பின் மூலம் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.