தமிழ்நாடு

அதிவேக பயணத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்; பறந்து சென்று 70 அடி கிணற்றில் மூழ்கிய சோகம்!

webteam

ஆற்காடு அருகே தறிகெட்டு ஓடிய கார் கட்டுப்பாட்டை இழந்து, அந்தரத்தில் பறந்து சென்று கிணற்றுக்குள் முழ்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரசிம்மரெட்டி (35), நிக்கல் ரெட்டி (23), தாக்கா நிக்கல் ரெட்டி (25) ஆகியோர், உறவினர்கள் சுபநிகழ்ச்சியில் பங்கேற்க புதுச்சேரிக்கு நேற்று காரில் சென்றனர். நிகழ்ச்சியை முடித்து விட்டு இன்று ஆந்திராவுக்கு திரும்பினர். காரை நரசிம்ம ரெட்டி ஓட்டிச்சென்றார். அப்பொழுது செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த கார் ஆற்காடு அடுத்த புதுப்பாடி ஜி.எம். நகர் பகுதியில் கார் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அந்தரத்தில் பறந்து சென்று சாலை ஓரம் உள்ள வேலிகளை உடைத்துக்கொண்டு போய், 70 அடி ஆழம் உள்ள தரை கிணற்றில் பாய்ந்தது.

இந்நிலையில் இதனை கண்ட அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து ஆற்காடு கிராமிய காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து, சமபவ இடத்திற்கு வந்த ஆற்காடு கிராமிய காவல் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி காரையும், காரிற்குள் இருந்தவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு, காரில் இருந்த 3 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து, காவல் துறையினர் காயமடைந்தவர்களை, மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கிணற்றில் மூழ்கி காரை மீட்கும் பணியில் கலவை தீயணைப்பு துறையினர் ஈடுப்பட்டனர். இதுகுறித்து ஆற்காடு கிராமிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.