தமிழ்நாடு

காரைக்குடி: நடுரோட்டில் திடீரென தீ பிடித்து பற்றி எரிந்த கார்

சங்கீதா

காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கார் எரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்நகரை சேர்ந்தவர் குப்புசாமி. இவரும், அவரது உறவினர்கள் இருவரும், இண்டிகா காரில் வெளியூர் சென்றுவிட்டு காரைக்குடி திரும்பியுள்ளனர். தேவர் சிலை அருகே வரும்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட குப்புசாமி காரிலிருந்து இறங்கி பேனட்டை திறந்துள்ளார்.

அப்போது திடீரென கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. காரின் முன்பகுதியில் பற்றிய தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

மேலும், கார் பற்றி எரிவதை வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டத்தால் அந்தப்பகுதி முழுவதும் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. காரைக்குடி புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், கண்ணதாசன் மணிமண்டபம் அமைந்துள்ள முக்கியப் பகுதியில் நடந்த இந்த விபத்தால் அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் வந்தவர்கள், புகை வந்ததும் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.