தமிழ்நாடு

செவிலியரை செருப்பால் அடிக்க முயன்ற தொழிலதிபர்? வழக்குப்பதிவு செய்ய மறுக்கும் காவல்துறை?

webteam

இரத்தப் பரிசோதனை நிலையத்தில் செவிலியரை காலணியால் அடிக்க முயன்ற தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறை மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் கிருஷ்ணா நகரில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் ஜெப வினோதினி(26). இவர் பணியில் இருந்தபோது இரத்தப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு பர்னிச்சர் கடை நடத்தும் தொழிலதிபர் கமல கண்ணன்(52) என்பவர் வந்துள்ளார்.

அப்போது பரிசோதனைக்காக வந்திருந்த கமல கண்ணன் தான் ஒரு முக்கிய பிரமுகர் எனவும், தன்னிடமே பணம் கேட்பாயா? என்றும் ஒருமையில் பேசி பின்னர் காலணியால் செவிலியரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து செவிலியர் ஜெப வினோதினி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யாமல் சங்கர் நகர் போலீசார் கமலகண்ணணுக்கு ஆதரவாக செயல்படுவதாக செவிலியர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.