தமிழ்நாடு

நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்

kaleelrahman

உள்ளாட்சித் தேர்தல் காரணமாக முதல் சம்மனுக்கு ஆஜராகாமல் இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இரண்டாவது சம்மனை அனுப்பியுள்ளனர்.

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூலை 22 ஆம் தேதி அவருக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீதம் வரை சொத்து சேர்த்தது தெரியவந்தது. மேலும், கணக்கில் காட்டப்படாத 25 லட்ச ரூபாய் பணம் உட்பட பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது எப்படி? என கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நேரில் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஆஜராக லஞ்சஒழிப்புத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கால அவகாசம் கேட்டு தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார். இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்தது. இந்நிலையில், வருகிற 25 ஆம் தேதி அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி லஞ்சஒழிப்புத் துறை சார்பில் மீண்டும் 2-வது சம்மனை அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன் 25-ம்தேதி காலை 10 மணிக்கு ஆஜராக சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக லஞ்சஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.