தமிழ்நாடு

மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் அரிப்பு - டேனிஷ் கோட்டைக்கு ஆபத்து!

webteam

தரங்கம்பாடியில் கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் கோட்டையை பாதுகாக்க கருங்கற்களால் ஆன அலைதடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கி.பி.1620 ஆம் ஆண்டு டேனிஷ் நேவி கேப்டன் ரோலண்ட் கிராப் என்பவரால் தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுபாட்டுக்கு இது மாறியது.

இந்நிலையில் கடந்த 2002-ல் டென்மார்க் அரசு ஒத்துழைப்புடன் டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம்பாடி நல சங்கம் தமிழக அரசின் தொல்லியல் துறையுடன் இனைந்து டேனிஷ் கோட்டை புதுப்பிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு தமிழக அரசால் பழமை மாறாமல் 2-வது முறையாக புதுப்பிக்கப்பட்டது.

டேனிஷ் காலத்தில் கோட்டைக்குள் கடல் நீர் புகாத வண்ணம் செங்கல் சுண்ணாம்பால் தடுப்பு சுவர்களை எழுப்பி இருந்தனர். அந்த சுவர் பேரிடர் காலங்களில் கடல் அரிப்பால் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் அரிப்பு அதிகமாகி கோட்டையின் பிராதான சுவரை சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலி தடுப்பு தாண்டி கடல் அலை உட்பகுகுந்து வருகிறது.

இந்நிலையில், கோட்டையின் பிரதான மதில்சுவரை கடல் அரிப்பு நெருங்கியுள்ளது. இதனால், உடனடியாக கோட்டையை பாதுகாக்க கருங்கற்களால் ஆன அலைதடுப்பு சுவர் அமைத்து கோட்டையை பாதுகாக்க தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.