தமிழ்நாடு

தஞ்சை: அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்தில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ஒருவர் கைது

webteam

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 50 வயதான ராபர்ட் எடிசன். இவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளி சென்றுள்ளார். அப்போது பாதி மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணுக்கு ராபர்ட் எடிசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட ராபர்ட் எடிசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராபர்ட் எடிசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் ராபர்ட் எடிசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.