தமிழ்நாடு

தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..!

Rasus

நெல்லை தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவடைகிறது.

தாமிரபரணி புஷ்கர விழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பாபநாசம், அம்பை, குறுக்குத்துறை, முறப்பநாடு, திருவைகுண்டம், புன்னக்காயல் உள்ளிட்ட 149 படித்துறைகளிலும் பக்தர்கள் புனித நீராட வசதிகள் செய்யப்பட்டது. தினமும் காலையில் சிறப்பு பூஜைகள், யாகங்கள், வேள்விகள் போன்றவையும் மாலையில் ஆரத்திகளும் நடைபெற்று வந்தன.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். இவர்கள் தவிர புஷ்கர விழாவில் புனித நீராட தமிழகம் மட்டுமின்றி புதுவை, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதுவரை லட்சக்கணக்கான மக்கள் தாமிரபரணி ஆற்றில் புனிர நீராடியுள்ளனர். காவல்துறையினர் மக்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவடைவதால் அதிக அளவில் பக்தர்கள் நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடத்தப்பட்டு வருகிறது.