தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க தடை விதிக்கக்கோரித் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த ராகவன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், சிப்காட்டிலுள்ள பெப்சி, கோக் உள்ளிட்ட 25 நிறுவனங்களுக்கு தாமிரபரணியிலிருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அந்த நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து 48 லட்சத்து 66 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இது தொடர்பான விசாரணையின் போது, கடந்த ஆண்டு நவம்பர் மாதமே பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.
சிப்காட் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவில் 50 சதவீதம் தண்ணீர் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் இருந்து வழங்கப்பட்டு வருவதாகவும், வறட்சியின் காரணமாக அதுவும் 10 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த பின், ராகவன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.