தமிழ்நாடு

கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலத்தில் இந்து முன்னணி பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு

kaleelrahman

மதுரையில் கிறிஸ்தவ சபையில் மத வழிபாடு நடந்த இடத்தில் இந்து முன்னணி பாஜகவினர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை தெற்குவாசல் தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் மார்த்தாண்டன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேல் மாடியில் நல்வாசனை ஏஜி சபை எனும் பெயரில் கிறிஸ்தவ மத வழிபாட்டில் பொதுமக்கள் கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வர்.

இந்நிலையில் நேற்று கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வழக்கம் போல வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னனி மாவட்ட தலைவர் அரசப்பன், பாஜக ஒபிசி பிரிவின் மாநில செயலாளர் ராஜகண்ணன், மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன், மேலும் பாஜகவை சேர்ந்த சுபா நாகலு, ஆதிசேஷன் ஆகியோர் சபை என்ற பெயரில் அத்துமீறி மதமாற்றம் செய்வதாகக் கூறி வீட்டு உரிமையாளரை மிரட்டியதோடு, மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பிரவீன் ராஜ்குமார் ஆகியோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்குவாசல் காவல் துறையினர் பிரச்னையில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து முன்னனியை சேர்ந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து பாஜக மற்றும் இந்து முன்னனியினர் மீது அத்துமீறி நுழைதல், தகாத வார்த்தைகளில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.