தமிழ்நாடு

இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு: உதவி ஆய்வாளர் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

sharpana

இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை வருகிற 17-ம்தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளருக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. மேலும், கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது. அதன்படி, உதவி ஆய்வாளர் தேர்வுக்காக பலர் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வந்தனர்.

மேலும் விண்ணப்பிக்கும் முறையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உதவி மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி என்பதால் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், கடந்த மூன்று நாட்களாகவே விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால், விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் தேர்வு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று உதவி ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதியை வருகிற 17ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.