தமிழ்நாடு

இடைநிலை ஆசிரியர்கள் 5 வது நாள் உண்ணாவிரத போராட்டம்: கூடுதல் ஆம்புலன்ஸூக்கு கோரிக்கை!

webteam

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நடத்திவரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் 5 வது நாளாக நீடித்து வருகிறது. 

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு விதமான ஊதியமும், 2009-ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு விதமான ஊதியமும் வழங்கப்படுவதாக கூறி, அதை எதிர்த்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் முன்னெடுத்தனர்.

சென்னை டி.பி.ஐ நுங்கம்பாக்கம் வளாகத்தில் இந்த வார தொடக்கத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம், 5 வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதுவரை 144 ஆசிரியர்களுக்கு உண்ணாவிரதத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

சம ஊதியம் எப்போது வழங்கப்படும் என தமிழக அரசு உறுதியாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர். சில ஆசிரியர்கள் குழந்தைகள் உடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உடல் நலக்குறைவு பாதிக்கப்படுவதால் கூடுதலான ஆம்புலன்ஸ் வாகனம் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.