தமிழ்நாடு

மாணவர்களைக் கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைத்தேனா?- நீலகிரி ஆசிரியை விளக்கம்

webteam

கூடலூரில் அரசுப் பள்ளி வளாகத்தை, மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர் பகுதியில் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று காலை பள்ளி மாணவர்களைக் கொண்டு, பள்ளி வளாகத்தை ஆசிரியர்கள் சுத்தம் செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர் தட்டிக் கேட்டதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். தற்சமயம் அந்த வீடியோ வெளியாகிய நிலையில், ஆசிரியர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியயை சரஸ்வதியிடம் புதிய தலைமுறை கேட்டபோது, “வழக்கமாக பள்ளியை சுத்தம் செய்யும் நபர் நேற்று விடுமுறையில் சென்று விட்டார். அதனால் நான் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த பள்ளி மாணவர்கள் எனக்கு உதவியாக பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர்.

பள்ளியில் ECO CLUB எனும் அமைப்பு உள்ளது. அந்த அமைப்பில் உள்ள மாணவர்களே என்னுடன் பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நான் பள்ளியை சுத்தம் செய்யும் காட்சிகளை பதிவு செய்யாமல், மாணவர்கள் பணி செய்வது போல காட்சிகளை மட்டும் பதிவு செய்து அந்த நபர் வெளியிட்டுள்ளார்” என கூறியுள்ளார்.