தமிழ்நாடு

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக் கொலை... ஒருதலைக் காதல் காரணமா..?

Rasus

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடலூர் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஆசிரியை ரம்யா வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு சென்றார். ஆனால், சற்று நேரத்தில் தாம் கொலை செய்யப்படப் போகிறோம் என்பது ரம்யாவுக்கு தெரியாது. பள்ளி வளாகத்திற்குள் திடீரென நுழைந்த ஒருவர் ரம்யாவை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் ரம்யா சரிய, அங்கிருந்து அந்த நபர் தப்பியோடிவிட்டார்.

இதைக்கண்டு பள்ளியில் இருந்த சக ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு தலைக் காதலால் ரம்யா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞர் ரம்யாவை ஒரு தலையாக காதலித்ததாகவும், அவரது பெற்றோரிடம் சென்று பெண் கேட்டதாகவும் தெரிகிறது. ராஜசேகருக்கு ரம்யாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரும் தொடர்ந்து ரம்யாவை ராஜசேகர் தொந்தரவு செய்ததாக சொல்லப்படுகிறது. 3 தனிப்படைகள் அமைத்து ராஜசேகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.