மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பள்ளியில் அந்தக் கிராமத்தினர் சார்பாக மூர்த்தி என்பவர் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி விடுதியில் தங்கிப் பயிலும் 11ம் வகுப்பு மாணவி ஆசிரியர் மூர்த்தி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் உள்ளிட்டவற்றில் தனது தாய் தந்தையுடன் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில் நேற்று மாணவியிடம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மூர்த்தி மீது போக்சோ சட்டப்பிரிவு மற்றும் கொலை மிரட்டல் சட்டப்பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளர் பள்ளிகளுக்கான இணை இயக்குனர் முனியசாமி நேற்று கூறியிருந்தார்.