தமிழ்நாடு அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்தின், சில்லரை மதுபானக்கடைகளில், பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான புதிய சீருடையை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடைப்படியாக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில் தான், தற்போது அதுகுறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஒரு செட் சீருடைக்கு ரூ.2,000 வீதம், ஆண்டுக்கு 3 செட் சீருடைகளுக்கு ரூ.6,000 வழங்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடை மேற்பார்வையாளர்களுக்கு வெளிர் நீல நிற சட்டை மற்றும் அடர் நீல நிற பேன்ட்டும், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு பழுப்பு நிற சட்டை மற்றும் அடர் சாம்பல் நிற பேன்ட்டும் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டையின் இடது மார்புப் பகுதியில் டாஸ்மாக் சின்னம் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம், சீருடைக்கான துணிகளை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும் எனவும், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில் அங்கீகரிக்கப்பட்ட நிறங்களில் துணிகள் கிடைப்பதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு 2026–27ஆம் ஆண்டுக்கான ரூ.6,000 சீருடைப்படியை தகுதியான ஊழியர்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். அக்டோபர் 31ஆம் தேதிக்குள் துணிகளை வாங்கி, நவம்பர் 10ஆம் தேதிக்குள் 3 செட் சீருடைகளையும் தைத்து முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 15, 2026 முதல் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடை வாங்காமல் அல்லது அணியாமல் இருந்தால், வழங்கப்பட்ட சீருடைப்படியை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே.நந்தகுமார் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.