தமிழ்நாடு

அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

Sinekadhara

அரியலூர் +2 மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையில் தனியார் பள்ளியில் படித்துவந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு, மாணவியை பள்ளி நிர்வாகம் மதமாறக் கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை என்று ஒரு தரப்பினரும், ஆனால் விடுதிக் காப்பாளர் திட்டியதால்தான் தற்கொலை என மறுதரப்பினரும் கூறிவந்தனர். இந்நிலையில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்கவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, வீடியோவை மாணவியின் இறப்பிற்கு பிறகு பரப்புவதற்கு காரணம் என்னவென்று விசாரணையின்போது அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

மேலும் விசாரணை முறையாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகிறது எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவியின் வீடியோவை எடுத்த முத்துவேல் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைக்கவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் மாணவியின் பெற்றோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற கிளை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாணவியின் பெற்றோர் வழக்கை சிபிஐக்கு மாற்ற முறையிட்டதை தொடர்ந்து, வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.