தமிழ்நாடு

தஞ்சை: மேளதாளம் முழங்க பாரம்பரிய நடனத்துடன் தொடங்கிய நாட்டுப்புறக் கலைவிழா

kaleelrahman

தஞ்சையில் தென்னக பண்பாட்டு மையத்தில் 450 நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெரும் கலை விழா தொடங்கியது.

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆக்டேவ் என்கிற வடகிழக்கு மாநில கலைவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 15-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த கலை விழாவைத் தொடர்ந்து தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடனங்களின் கலைவிழா இன்று தொடங்கியது. இந்த கலைவிழா வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் 11 குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், குஜராத், புதுச்சேரி, தெலுங்கானா, ஒடிசா, மத்தியபிரதேஷம், பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 30 குழுக்களைச் சேர்ந்த 450 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

முதல்நாளில் கேரளாவின் சிங்காரி மேளம் நடனத்துடன் கலை விழா தொடங்கி தமிழ்நாட்டை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற கரகாட்டம் மற்றும் காவடியாட்டம் ராஜஸ்தானின் ஜாக்ரி நடனமும், மராட்டியத்தின் லாவணி ஆட்டமும், ஜம்முகாஷ்மீரின் சுர்மா நடனமும், மத்திய பிரதேசத்தின் பதாய் நடனமும், ஹரியானாவின் பாக் நடனமும், குஜராத்தின் டங்கி நடனமும், பஞ்சாபின் பங்காரா நடனமும் நடைபெற்றது.

இதில், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்பட திரளானோர் பங்கேற்று நாட்டுப்புற நடனங்களை கண்டு ரசித்தனர்