தமிழ்நாடு

‘இளைஞர்கள் டயரை திருடியதாக பரவிய வீடியோ’ - உண்மை என்ன ?

‘இளைஞர்கள் டயரை திருடியதாக பரவிய வீடியோ’ - உண்மை என்ன ?

webteam

தஞ்சையில் டயர் வாங்கிவிட்டு பணம் ‌தராமல் இரு இளைஞர்கள் தப்பியோடியதாக வீடியோ பரவும் நிலையில், ‌உண்மையில் அவர்கள் பணம் கொடுத்தே டயர்களை வாங்கிச்சென்றது தெரியவந்துள்ளது. 

தஞ்சை மேரிஸ் கார்னர் பகுதியில் உள்ள கடைக்கு கடந்த 15ஆம் தேதி இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். வாகனத்தின் பின்பக்கம் அமர்ந்து வந்த இளைஞர் கடைக்குள் சென்று டயரை கையில் எடுத்து விலை பேசி வெளியில் வருவதற்குள், வெளியே இருசக்கர வாகனத்தில் இருந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை தயார் நிலையில் வைத்திருந்தார். 

டயருடன் வெளியே வந்த இளைஞர் அந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் அருகில் உள்ள கடையின் சிசிடிவியில் பதிவாகியது. அவர்களை இருவர் விரட்ட முயலும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. இதையடுத்து இரு இளைஞர்களும் பணம் தராமல் டயரை எடுத்துச் சென்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் காட்சிகள் பரவி வருகின்றன. இது குறித்து அந்த கடைக்காரரிடம் கேட்ட போது, அந்த இளைஞர்கள் டயருக்கான தொகையை தந்துவிட்டே எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்தார்.