தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொள்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.
பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தாராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதை தவித்திருக்கிறார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை அடியோடு வெறுக்கிறேன்.
காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாக தொடர்ந்து செயல்படும். நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும்'' என தெரிவித்துள்ளார்