புளித்த மாவு கொடுத்ததாக எழுந்த பிரச்னையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி , மாவட்ட காவல் கண்காளிப்பாளாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கொடுக்கப்பட்டூள்ளது மனுவில் மளிகைக் கடைக்காரர் செல்வம் மீது மட்டும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஒருதலைபட்சமானது என கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் வசித்து வருகிறார், எழுத்தாளர் ஜெயமோகன். தமிழ் மற்றும் மலையாளத் தில் பல்வேறு படைப்புகளை எழுதியுள்ள இவர், நான் கடவுள், அங்காடித் தெரு, கடல், 2.0, சர்கார் உட்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
அவர் பார்வதிபுரத்தில் உள்ள செல்வம் என்பவரின் கடையில் தோசை மாவு வாங்கிச் சென்றார். பின்னர் அது சரியாக புளிக்கவில்லை என்று கூறி கடையில் திருப்பிக் கொடுத்தார். அப்போது கடைக்காரர் செல்வத்தின் மனைவி தீபாவுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சிலர் கடைக்காரருடன் சேர்ந்து அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வடசேரி காவல் நிலையத்தில் ஜெயமோகன் புகார் அளித்தார். போலீசார், கடைக்காரர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் செல்வம் கைது செய்யப்பட்டார். கடைக்காரர் செல்வத்தின் மனைவி தீபாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி கடை ஊழியர் கூறும்போது, ’’ மாவு வாங்கிவிட்டு சென்ற ஜெயமோகன், எங்கள் முதலாளியம்மாவை அடித்தார். அதனால் அவரை முதலாளியம்மா தள்ளினார். இதை பார்த்த என் முதலாளி, ஜெயமோகனை அடித்தார். இருவரும் மாறி மாறி அடித்தார்கள். இரண்டு பேருமே சண்டை போட்டார்கள்’’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஜெயமோகன் மீது நடவடிக்கை எடுக்காமல் , மளிகைக்கடைக்காரர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி, தமிழநாடு வணிகர் சங்கங்களின் பேரவை காவல் கண்காணிப்பாளரை சந்தித்தது. மனு ஒன்றையும் அளித்த அவர்கள் “எழுத்தாளர் ஜெயமோகன் சண்டையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.