தமிழ்நாடு

குழந்தை சுர்ஜித்துக்காக தமிழகம் முழுவதும் தொடரும் பிரார்த்தனை!

webteam

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் நம்பிக்கையோடு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் குழந்தை சுர்ஜித்துக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றது. நாகூர் தர்காவில் கூடிய 50க்கும் அதிகமானோர், குழந்த‌ சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என தொழுகை நடத்தினர். இந்த சிறப்புத்தொழுகையில் பலர் கனத்த இதயத்தோடு பங்கேற்றிருந்தனர். 

குழந்தை பத்திரமாக மீட்கப்படுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏர்வாடி பள்ளிவாசலிலும் சுர்ஜித்துக்காக தொழுகை நடத்தப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள் குழந்தை சுர்ஜித்துக்காக மனமுருகி வழிபாடு நடத்தினர். 

ராமநாதபுரம் பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டுத்தொழுகையில், ஏராளமானோர்‌ பங்கேற்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என மனமுருகி வேண்டினர். நாகை அருகே எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமத்தில் காப்பகத்தில் உள்ள 200 சிறுவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி குழந்தைக்காக மனமுருக வேண்டிக்கொண்டனர். 

ஹஜ் புனித பயணத்திற்காக தமிழகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றவர்கள் குழந்தை சுர்ஜித்தின் நிலையை அறிந்து மெக்கா செல்லும் வழியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.