காவல்துறை
காவல்துறை ட்விட்டர்
தமிழ்நாடு

போதைப் பொருட்களைத் தடுக்க நடவடிக்கை - தமிழக காவல்துறை

PT WEB

ஆனந்தன்

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டிஜிபி சங்கர்ஜிவால், இன்று சென்னை பெருநகர காவல்துறையில் போதைக்கு எதிரான குழுவினருக்கான (Anti Drugs Clubs) பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். இதில் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், ”போதைப் பொருட்களைத் தடுக்க தமிழக காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். Anti Drugs Clubs சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் போதைப் பொருட்களுக்கு எதிராக ஆலோசனை நடத்தினோம். போதைப் பொருள் தொடர்பில் இருந்த நடவடிக்கையில் ஈடுபட்டு 825 வெளிமாநில நபர்களை கைது செய்துள்ளோம். 2 ஆண்டுகளில் போதைப் பொருட்கள் மூலமாகச் சம்பாதித்த 18.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 47 அசையும், அசையா சொத்துகள், 6,124 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டிரக்ஸ் பிரிவை தமிழ்நாடு உருவாக்க ஆலோசனை வழங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு 28,383 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டது. 14,934 குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில், அதிகளவு பிடித்துள்ளோம். 976 மெடிக்கல் ஷாப்களில் சோதனை நடத்தி 164 மெடிக்கல் ஷாப்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அதில் 9 ஷாப்ஸ் லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டது.

கடந்த மூன்றாண்டுகளில் 1,501 பேரை குண்டர்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்து உள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட 18,830 கிலோ போதைப் பொருட்களை அழித்துள்ளோம். போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. போதைக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வும் வழங்கி வருகிறது” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டிஜிபி சங்கர் ஜிவால், ”கஞ்சாவை தடுக்கும்போது போதை மாத்திரைகளுக்கு மாறியுள்ளார்கள். அதை அறிந்து உடனே நடவடிக்கை எடுத்து வருகிறோம். மெடிக்கல் ஷாப்புகளில் போதை மாத்திரைகள் வாங்கினார்கள், அதையும் தடுத்தோம். கொரியர் மூலமாக மாறியது. அதையும் தடுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஜாபர் சாதிக் தொடர்பான விவரங்கள் கேட்டு தமிழக காவல் துறையிடம் மத்திய போதைப் பொருள் அதிகாரிகள் இதுவரை எதுவும் கேட்கவில்லை. கேட்டால் அனைத்து விவரங்களையும் தமிழக காவல்துறை தரத் தயார்.

மத்திய ஏஜென்சிகள் போதைப் பொருள் பறிமுதலைவிட, தமிழக காவல்துறை பறிமுதல் செய்த எண்ணிக்கை அதிகம். தமிழகம் வரும்போது பிரதமர் தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் அதிகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார் என்ற கேள்விக்கு புள்ளி விவரங்கள் அடிப்படையில் அனைத்து விதமான பதிலையும் அளித்துள்ளேன். நான் அரசு ஊழியர் என்பதால் இந்த கேள்விக்கு பதில் அளிக்க இயலாது. புரோட்டான் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்ச்சியாக, முதலில் தகவலை கேட்டோம். தரவில்லை, பின்னர் மத்திய தகவல் தொழில்நுட்பம் மூலமாக கேட்டோம். தற்போது தகவல் தருகிறார்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுவோம்” என்றார்.