பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் pt web
தமிழ்நாடு

“அவர் பாட்டுக்கு பொய் சொல்லிக்கிட்டே இருக்கட்டும்; அதுக்கெல்லாம்..”- அண்ணாமலை குறித்து பிடிஆர் பதில்

Angeshwar G

செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததார். அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார்.

annamalai

இவ்விவகாரம் சர்ச்சையாகி பூதாகரமானது. முடிவில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி இல்லை என அறிவிக்கும் அளவிற்கு வளர்ந்தது. இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “ஆங்கில இந்து நாளிதழ் 1956 ஜூன் 1,2,3 தேதிகளின் archived copy என்னிடம் உள்ளது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். 10 நாட்கள் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் முதல் நாள் ராஜாஜி பேசினார். நான்காவது நாள் பி.டி.ராஜன் பேசினார். அன்றுதான் பேரறிஞர் அண்ணா பேசினார். பேசிய ஒரு ஒரு வார்த்தைகளையும் நாளிதழ்கள் பதிவு செய்துள்ளன. நான் இரண்டரை ஆண்டுகள் தமிழகத்தின் பாஜக தலைவராக உள்ளேன். நான் சொன்ன ஒரு டேட்டா தவறு என சொல்லுங்கள். நான் ஒரு விஷயத்தை சொன்னால் சரியாகத்தான் சொல்லுவேன்” என்றார். ஆனால் அதன் பிறகு தி இந்து, தினமணி உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள் அன்று நடந்தது தொடர்பான செய்திகளை வெளியிட்டு அண்ணா மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்றும் பயந்து ஓடவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் அது குறித்து அண்ணாமல் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், “என் தாத்தா மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சர், பேரறிஞர் அண்ணா எங்கள் கட்சியைத் துவங்கியவர், தமிழகத்தின் முதலமைச்சர். தேவர் ஐயா ஒரு இயக்கத்திற்கு தலைவராக இருந்தவர், மிகவும் புலமை வாய்ந்தவர். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகவும் புலமை வாய்ந்தவர்.

பரஸ்பர நட்போடு இருந்தவர்களைப் பற்றியும் அவர்களது உறவைப் பற்றியும் 1956ல் நடந்தது என சொல்லி, எங்கேயோ படித்தேன் என சொல்லி அதற்கு எந்த ஆதாரமும் கொண்டு வராமல் ஏதோ ஒரு கருத்தை முன் வைக்கிறார். இதற்கெல்லாம் சாதாரண மனிதர்கள் பதில் சொல்லக்கூடாது. யாரிடம் என்ன கருத்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டு எதற்கு பதில் சொல்ல வேண்டும் கூடாது என்பதை சிந்திக்க வேண்டும்.

எதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எதை புறம் தள்ள வேண்டும் என சிந்திப்பது தான் ஜனநாயகத்திற்கு நல்லது. இம்மாதிரியான கருத்துகளுக்கு சாதாரண நபர்கள் பதில் பேசவே கூடாது. நாம் ஏன் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தொடர்ந்து ஒருவர் பொய் சொல்லிக் கொண்டே இருந்தால் நாம் விளக்கம் சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம், அவர் பாட்டுக்கு பொய் சொல்லிக் கொண்டே இருக்கட்டும். தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்கள்” என்றார்.